கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2018 11:00 PM GMT (Updated: 5 Sep 2018 9:08 PM GMT)

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டாவை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா பகுதிகளில் இருந்து கச்சா எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். டெல்டா பகுதி முழுவதும் பாசன ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அரிவாள் உள்ளிட்ட உழவு கருவிகளை கொண்டு வந்திருந்தனர். இதில் மாநில துணைத்தலைவர் பிரகதீஸ்வரன், மாநில பொருளாளர் கருணாநிதி, மாவட்ட தலைவர் அயோத்தி மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story