தூத்துக்குடி கோர்ட்டில் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி மாணவி சோபியா மனுதாக்கல்


தூத்துக்குடி கோர்ட்டில் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி மாணவி சோபியா மனுதாக்கல்
x
தினத்தந்தி 6 Sep 2018 9:30 PM GMT (Updated: 6 Sep 2018 1:34 PM GMT)

ஆராய்ச்சி மாணவி சோபியா, போலீசார் பறிமுதல் செய்த தனது பழைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி,

ஆராய்ச்சி மாணவி சோபியா, போலீசார் பறிமுதல் செய்த தனது பழைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

ஆராய்ச்சி மாணவி

தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா(வயது 28). இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 3–ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது, சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால், புதிய பாஸ்போர்ட்டுடன், இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோர்ட்டில் மனு

இந்த நிலையில் மாணவி சார்பில் வக்கீல் அதிசயகுமார் நேற்று காலை தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை போலீசார் கடந்த 3–ந் தேதி விசாரணைக்காக எனது பழைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். அதற்கான எந்த அத்தாட்சி சான்றும் தரவில்லை. எனது அமெரிக்க விசா, பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது. ஆகையால் எனது பழைய பாஸ்போர்ட்டை எனக்கு திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, வருகிற 10–ந் தேதி(திங்கட்கிழமை) கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளதாக வக்கீல் தெரிவித்தார்.


Next Story