நாகையில் விவசாயிகள் கருப்புகொடி ஏந்தி போராட்டம்


நாகையில்  விவசாயிகள் கருப்புகொடி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2018 11:00 PM GMT (Updated: 6 Sep 2018 7:07 PM GMT)

நாகை அருகே விவசாயிகள் கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் செல்லூர், பாலையூர், சிக்கல், கீழ்வேளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான செல்லூர், பாலையூர், சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரியில் இருந்து கடைமடைக்கு வரும் தண்ணீர் நின்றுவிட்டதால் நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதியான பாலையூர், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் காய்ந்து வெடிக்க தொடங்கியுள்ளது. கடைமடை பகுதிகளுக்கு முறையாக காவிரி நீர் கொண்டுவராத பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று பாலையூர் வயல் பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேவநதி, வெட்டாற்றில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

 நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி முடிந்து, தற்போது சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நாகை பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரானது விவசாய நிலங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வரவில்லை. தற்போது சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை முறைவைக்காமல் நாகை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் சம்பா சாகுபடி முறையாக நாகை பகுதி விவசாயிகள் மேற்கொள்ளமுடியும். கடைமடை பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் விவசாயிகள் ஈடுப்படப்போவதாக அறிவித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story