குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Sep 2018 9:30 PM GMT (Updated: 6 Sep 2018 7:22 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக் குடங் களுடன் பழனி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பழனி, 

பழனி நகராட்சி 18-வது வார்டில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்த வார்டு பகுதிக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. இந்த நிலையில் பெரிய பள்ளிவாசல் மேற்கு தெரு, வண்ணார்தெரு ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து நகராட்சி அலுவலகத்துக்குள் சென்ற பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் நாராயணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது சிலர் மின்மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை திருடி விடுகின்றனர்.

மேலும் தங்கள் பகுதியில் தெருவிளக்குகள் கடந்த பல மாதங்களாக எரியவில்லை. சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். அதையடுத்து பேசிய ஆணையாளர், பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 18-வது வார்டு பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும், மின்மோட்டார்கள் மூலம் குடிநீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story