வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதால் வாலிபரை காரில் கடத்திச்சென்ற 6 பேர் கைது


வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதால் வாலிபரை காரில் கடத்திச்சென்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sep 2018 10:15 PM GMT (Updated: 6 Sep 2018 7:23 PM GMT)

பட்டாபிராமில் வாலிபரை காரில் கடத்திச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றிய ஆத்திரத்தில் கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆவடி,

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமில் வசிப்பவர் சரவணன் (வயது 33). இவர் அருகில் உள்ள மாடர்ன் சிட்டி பகுதியில் 2 ஆண்டுகளாக ‘ஐ.பி.எஸ். எச்.ஆர். சொலுஷன்’ என்ற பெயரில் படித்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 2-ந்தேதி காலை 8.50 மணிக்கு மாடர்ன் சிட்டி எடை மேடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காரில் வந்த மர்மநபர்கள் சிலர் சரவணனை வழிமறித்து காரில் கடத்திச் சென்றனர். போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல்காரர்களை தேடிவந்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த யோகவேல் (33), அரியலூர் மாவட்டம் கொள்ளபுரம் கிராமத்தை சேர்ந்த மாமல்லன் (29), கணேசமூர்த்தி (23), ராஜ்குமார் (24), விருத்தாச்சலத்தை சேர்ந்த மேகவண்ணன் (20), விக்னேஷ் (19) ஆகிய 6 பேரும் நேற்று காலை பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து பட்டாபிராம் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

மாமல்லன் என்பவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.6 லட்சமும், யோகவேலுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் சரவணன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் ஒரு ஆண்டாக இருவருக்கும் வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாமல்லன், யோகவேல் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களது நண்பர்களான மேகவண்ணன், விக்னேஷ், ராஜ்குமார், கணேசமூர்த்தி ஆகியோருடன் சரவணனை காரில் கடத்திச் சென்றனர்.

கடலூர் சென்றவுடன் அங்கு வேறு ஒரு காரில் ஏற்றி கடத்திச்சென்று ஆண்டிமடம் அருகே இறங்கி, அங்கிருந்து மற்றொரு காரில் கடத்திச்சென்றனர். இப்படி போலீசுக்கு தெரியாமல் இருக்க மாறி, மாறி 3 கார்களில் கடத்திச்சென்று விருத்தாச்சலத்தில் இரவு ஒரு தனியார் விடுதியில் தங்கவைத்தனர்.

அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி, சரமாரியாக தாக்கினர். இதில் சரவணனுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டதால் மறுநாள் (3-ந் தேதி) காலையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அப்போது சரவணன் டாக்டர்களிடம் தன்னை அந்த நபர்கள் காரில் கடத்திவந்ததாக கூறினார்.

உடனே டாக்டர்கள் இதுகுறித்து விருத்தாச்சலம் போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். விருத்தாச்சலம் போலீசார் இதுபற்றி பட்டாபிராம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பட்டாபிராம் போலீசார் 6 பேரையும் கைது செய்ததுடன், விருத்தாச்சலம் சென்று சரவணனையும் மீட்டுவந்தனர்.

பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, நேற்று இரவு திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தார். மேலும் இவ்வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என பட்டாபிராம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடத்தல்காரர்களிடமிருந்து 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story