பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.4 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது


பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.4 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sep 2018 10:45 PM GMT (Updated: 6 Sep 2018 7:49 PM GMT)

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சில் இருந்து இறக்கப்பட்ட 7 மூட்டைகளை மினி லோடு வேனில் சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார், மினி லோடு வேனில் ஏற்றப்பட்டு இருந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் பிரித்து சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிந்தது. இதையடுத்து மினி லோடு வேனுடன் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக அந்த பார்சல்களை மினி லோடு வேனில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஜலும் சிங் (வயது 28), நாராயண சிங்(32), புழலை சேர்ந்த ரேவத் சிங்(29) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் சென்னை சவுகார்பேட்டையில் டீ கடை நடத்தி வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தடை செய்யப்பட்ட குட்காவை பெங்களூருவில் இருந்து மொத்தமாக கடத்தி வந்து சவுகார்பேட்டையில் உள்ள அறையில் வைத்துக்கொண்டு சில கடைகளுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ குட்கா மற்றும் ஒரு மினி லோடு வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story