மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்


மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Sep 2018 12:32 AM GMT (Updated: 7 Sep 2018 12:32 AM GMT)

வருமான வரித்துறை அதிகாரியை சந்தித்ததாக கூறிய விவகாரத்தில் மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி, தனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரியை எடியூரப்பா மகன் நேரில் சந்தித்து பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இந்த குற்றச்சாட்டை வருமான வரித்துறை அதிகாரி மறுத்து, அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் தவறான குற்றச்சாட்டை கூறிய குமாரசாமி மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று(அதாவது, நேற்று முன்தினம்) ஒரு விளக்கத்தை கூறி இருக்கிறார்கள். அதாவது அரசியல்வாதிகளின் குழந்தைகள் யாரும் தங்களை வந்து சந்திக்கவில்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் முதல்-மந்திரி கூறியது உண்மைக்கு புறம்பானது என்று தெரியவந்துள்ளது. வருமான வரித்துறையை பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா முயற்சி செய்வதாக குமாரசாமி கூறினார்.

இதை அவர் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குமாரசாமி மீது மானநஷ்ட வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story