‘உயிருக்கு பயந்தது இல்லை’ ‘வாட்ஸ்–அப்’பில் மிரட்டிய ரவுடிக்கு மதுரை சிறை பெண் சூப்பிரண்டு பதிலடி


‘உயிருக்கு பயந்தது இல்லை’ ‘வாட்ஸ்–அப்’பில் மிரட்டிய ரவுடிக்கு மதுரை சிறை பெண் சூப்பிரண்டு பதிலடி
x
தினத்தந்தி 7 Sep 2018 11:45 PM GMT (Updated: 7 Sep 2018 2:39 PM GMT)

‘வாட்ஸ்–அப்‘பில் மிரட்டல் விடுத்த ரவுடிக்கு மதுரை சிறை பெண் சூப்பிரண்டு ஊர்மிளா பதிலடி கொடுத்தார். உயிருக்கு நான் பயந்தது இல்லை என அவர் கூறினார்.

மதுரை,

மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளா. இவரை ரவுடி ஒருவர் ‘வாட்ஸ்–அப்‘பில் பகிரங்கமாக மிரட்டி பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பேசியவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த ‘புல்லட் நாகராஜ்‘.

இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புல்லட் நாகராஜின் அண்ணன், ஒரு கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்தார். அப்போது அவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக வாங்கி சாப்பிட்டு போதை ஏற்றி கொள்வாராம். சில நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதனை செய்ய வந்த பெண் டாக்டரிடம் தனக்கு மருந்து அதிகமாக ஏற்றி ஊசி போடுமாறு கூறியுள்ளார்.

பெண் டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை அவதூறாக திட்டியுள்ளார். இதுகுறித்து அந்த டாக்டர், சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளாவிடம் புகார் செய்தார். அதையடுத்து சூப்பிரண்டு, அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் புல்லட் நாகராஜின் அண்ணன் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஜெயிலில் நடந்தது குறித்து தம்பி புல்லட் நாகராஜிடம் கூறியுள்ளார்.

அதைதொடர்ந்து புல்லட் நாகராஜ் சிறைத்துறை சூப்பிரண்டுக்கு ‘வாட்ஸ்–அப்‘பில் ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்தார்.

“நான் புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு கொன்றிருக்காங்க. மதுரை ஜெயிலை பொறுத்தவரை உங்களுக்கு நிர்வாகத் திறமை கிடையாது. சிறையில் கைதி மீது கை வைச்ச ஒரே காரணத்திற்காக ஜெயிலர் ஒருவரை எரிச்சு கொன்றது ஞாபகம் இருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க.

நாங்க திருந்தி இப்ப பெரிய ஆளாக இருக்கோம். கைதிகள் யாருக்காவது பிரச்சினை வந்தால் நடப்பதே வேறு. உங்களை நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால், பசங்க ஏதாவது பண்ணிவிடப் போறாங்க. முடிஞ்சா என் மேல ஆக்‌ஷன் எடுத்து பாரு“ என்று பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த ஆடியோ 7 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா நேற்று காலை மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. அப்போது மதுரை மத்திய சிறை ஜெயிலர் ஜெயராமன் மட்டும் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளாவை ‘வாட்ஸ்–அப்‘பில் மிரட்டிய ரவுடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்ட்டுள்ளதாவது:–

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். இவர் பல்வேறு வழக்குகளில் கைதியாக மதுரை மத்திய சிறையில் இருந்தார். இந்த நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி, சூப்பிரண்டு, பெண் டாக்டர் ஆகியோரை மிரட்டி வாட்ஸ்–அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புகார் குறித்து மதுரை கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டரை விசாரணை நடத்துமாறு போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.

இதுபற்றி சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா கூறும் போது, “ரவுடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். நான் உயிருக்கு பயந்தது இல்லை“ என்று பதிலடியாக கூறினார்.


Next Story