ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை


ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:38 PM GMT (Updated: 7 Sep 2018 11:38 PM GMT)

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) குடிநீர் ஆதாரத்தை தருகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும், விநாயகர் சிலை அமைப்பவர்களுக்கும் சில தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்துள்ள விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்.

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story