நாகர்கோவிலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் ஆண் பிணம்


நாகர்கோவிலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் ஆண் பிணம்
x
தினத்தந்தி 8 Sep 2018 12:04 AM GMT (Updated: 8 Sep 2018 12:04 AM GMT)

நாகர்கோவிலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் ஆண் பிணம் கிடந்தது. கொன்று வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பெருவிளை கோட்டவிளை பகுதியில் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், ஆசாரிபள்ளம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி அந்த பிணத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவரது இரண்டு கைகளும் பின்புறமாக லுங்கியால் கட்டப்பட்டு இருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றுக்குள் வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உடலில் வேறு இடங்களில் காயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் போலீசார், அந்த பகுதி மக்களிடம் பிணத்தை காட்டி அடையாளம் காண முயன்றனர். ஆனால் அவர் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே போலீஸ் மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது பிணம் கிடந்த கிணற்றில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. இதேபோல் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிணமாக கிடந்தவர் யார்? என்ற விவரம் தெரிய வந்தால்தான் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல் கட்டமாக குமரி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலை அந்தந்த போலீஸ் நிலையங்களில் இருந்து சேகரிக்க தொடங்கி உள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிணம் கிடந்த கிணற்றின் அருகே உள்ள ஆலயம் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிணமாக கிடந்தவரது கைகள் கட்டப்பட்டு இருந்ததால் இந்த கொலையில் 3 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்டு பிணம் கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பெருவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story