ஊழியருக்கு தவறுதலாக 100 மடங்கு அதிக சம்பளம்!


ஊழியருக்கு தவறுதலாக 100 மடங்கு அதிக சம்பளம்!
x
தினத்தந்தி 8 Sep 2018 7:20 AM GMT (Updated: 8 Sep 2018 7:20 AM GMT)

ஆஸ்திரேலியாவில் ஊழியர் ஒருவருக்கு தவறுதலாக 100 மடங்கு அதிக சம்பளம் போடப்பட்டுள்ளது.

தசம புள்ளியை தவறாகப் புரிந்துகொண்டதால், குறிப்பிட்ட ஊழியருக்கு 4,921.76 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு பதில் 4,92,176 ஆஸ்திரேலிய டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு தசம புள்ளிகள் மாறியதால், அவருக்கான சம்பளம் 100 மடங்குக்கும் அதிகமாகிவிட்டது.

ஊழியர் ஒருவரின் தவறின் காரணமாகவே இது நடந்ததாக அதுகுறித்துக் கூறிய அந்தப் பிராந்தியத்தின் தலைமை தணிக்கையாளர் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த ஊழியர், தனக்கு 100 மடங்கு அதிக சம்பளம் போடப்பட்டதை அறிந்ததுமே கூடுதல் பணத்தை திரும்ப அளித்துவிட்டார்.

ஆனால் அத்தொழிலாளர் தொலைதூரக் கிராமத்தில் வசித்து வந்ததால், ஒரு வாரம் கழித்துதான் அவர் பணத்தைத் திரும்பச் செலுத்தியதாக தலைமை தணிக்கையாளர் கூறினார்.

அவரது அறிக்கையில், கணினியில் தகவலை தவறுதலாகப் பதிவிட்டது, அதைத் தொடர்ந்து கணினி அளித்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாதது என இரண்டு மனிதத் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டின் ஜனவரி மாதம்வரை இந்தப் பிராந்தியத்தின் அரசாங்கத் துறைகளால் மேற்கொள்ளப்பட்ட 743 அதிக பணம் வழங்கப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறாக மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றங்களால் இழந்த பணத்தில் 7 லட்சத்து 67 ஆயிரம் டாலர்கள் இன்னும் அரசுத் துறைகளுக்குத் திரும்ப வரவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் ஒவ்வோர் ஆண்டும் 1.2 மில்லியன் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதில் 0.2 சதவீத தவறுகள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் தவிர்க்கும் வகையில் கணினியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story