தியாகதுருகம் அருகே ஜாமீனில் வந்தவர் சாவில் திருப்பம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தீர்த்து கட்டினேன், கைதான டிரைவர் வாக்குமூலம்


தியாகதுருகம் அருகே ஜாமீனில் வந்தவர் சாவில் திருப்பம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தீர்த்து கட்டினேன், கைதான டிரைவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:30 PM GMT (Updated: 8 Sep 2018 8:19 PM GMT)

தியாகதுருகம் அருகே ஜாமீனில் வந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்ததாக, டிரைவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன்(வயது 31). இவர் தனது டிராக்டரில் மணல் கடத்தி வந்த போது, அவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்ட முருகன், கடந்த ஜூன் மாதம் 20–ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் 22–ந்தேதி பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் முருகன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே முருகனின் மனைவி வளர்செல்வி, அதே பகுதியை சேர்ந்த வெள்ளைக்காரன் மகன் சக்திவேல்(24) மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து சக்திவேலை போலீசார் தேடி வந்தனர்.

போலீசார் தேடுவது பற்றி அறிந்த சக்திவேல், பெரியமாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர், சக்திவேலை தியாகதுருகம் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் சக்திவேல் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் முருகன் வைத்திருந்த டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். வேலை தொடர்பாக அவர் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவார். அப்போது எனது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த நான் எனது மனைவியையும், முருகனையும் கண்டித்தேன். இருப்பினும் அவர்கள் கள்ளத்தொடர்பை விடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நான் முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி கடந்த ஜூன் மாதம் 21–ந்தேதி இரவு பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி அதன் மூலம் மீன்பிடிக்க முருகனை அழைத்தேன்.

அதன்படி முருகனும் வந்தார். பின்னர் நான் மின்கம்பியை வளைத்து, அதில் குச்சியை கட்டி ஆற்றின் ஒரு பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வைத்தேன். மின்கம்பியின் மறுமுனையை, ஆற்றின் கரையில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்ஒயருடன் இணைத்தேன். இதில் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததில் மீன்கள் செத்து மிதந்தன.

இதையடுத்து மின்கம்பியை எடுத்து விட்டு, மீன்களை எடுத்து வருமாறு முருகனிடம் கூறினேன். அப்போது அவர் ஆற்றில் இறங்கியதும், மீண்டும் மின்கம்பியை மின்ஒயருடன் இணைத்து தண்ணீரில் போட்டேன். இதில் மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்தார். பின்னர் நான் அங்கிருந்து தப்பிச்சென்றேன். போலீசார் தன்னை தேடுவதை அறிந்து சரணடைந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து சக்திவேல், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story