விபத்தில் பார்வையை இழந்த வழக்கில் சாய ஆலை மேலாளராக பணிபுரிந்தவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு


விபத்தில் பார்வையை இழந்த வழக்கில் சாய ஆலை மேலாளராக பணிபுரிந்தவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு
x
தினத்தந்தி 8 Sep 2018 10:53 PM GMT (Updated: 8 Sep 2018 10:53 PM GMT)

விபத்தில் பார்வையை இழந்த வழக்கில் சாய ஆலை மேலாளராக பணிபுரிந்தவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமசர தீர்வு மூலம் வழங்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதனை முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி தொடங்கிவைத்தார். இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டது. அதன்படி விபத்து வழக்கு ஒன்றில் பார்வையை இழந்த ஒருவருக்கு தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்று ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் பூபதி (வயது 47). இவர் திருப்பூர்-காங்கேயம் ரோடு அமர்ஜோதி கார்டன் பகுதியில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள ஒரு சாய ஆலை நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமதி. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் மும்மூர்த்தி நகரில் மோட்டார்சைக்கிளில் ஜெயப்பிரகாஷ் பூபதி சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், ஜெயப்பிரகாஷ் பூபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு இரண்டு கண்ணிலும் பார்வை பறிபோனது. பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதையடுத்து 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி ஜெயப்பிரகாஷ் பூபதியின் மனைவி, இழப்பீடு கேட்டு விபத்திற்கு காரணமான இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர், உரிமையாளர் மற்றும் தனியார் காப்பீடு நிறுவனம் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாபுதீன் அறிவுறுத்தலின் பேரில், சமரச தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விபத்தில் இரு கண் பார்வை இழந்த ஜெயப்பிரகாஷ் பூபதிக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க காப்பீடு நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து இதற்கான காசோலையை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி, ஜெயப்பிரகாஷ் பூபதிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாபுதீன், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி அழகேசன், திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் கவியரசு, நித்திய கலா மற்றும் காப்பீடு நிறுவன துணை மேலாளர் விக்ரம் மற்றும் வக்கீல்கள் கந்தசாமி, தமயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், அவினாசி, காங்கேயம், பல்லடம், உடுமலை ஆகிய நீதிமன்றங்களில் அந்தந்த நீதிபதிகள் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 அமர்வுகளில் 1,172 வழக்குகளுக்கு ரூ.19 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரத்து 776-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.

இதுபோல் தேசிய அளவில் நடந்த லோக் அதாலத்தில், தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி வரை 74 ஆயிரத்து 971 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.179 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரத்து 61 வழங்கப்பட்டுள்ளது.

Next Story