சென்னை, சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி


சென்னை, சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 9 Sep 2018 10:45 PM GMT (Updated: 9 Sep 2018 6:54 PM GMT)

எண்ணூரில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு இதுவரை முறையான பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

சுனாமி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பாரத் நகர் பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக ஏற்கனவே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

கழிவுநீர் செல்லும்போது திடீரென மின் மோட்டார்கள் இயங்கவில்லையெனில், பாரத் நகர் பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர்.

அடிக்கடி இந்த பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தாழ்வான பகுதியில் தேங்கிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே சுனாமி குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மாற்று பாதையில் குழாய் மூலம் கொண்டு செல்லவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story