கல்வித்துறை பணியாளர்களை பணியிடம் மாறுதல் செய்ய வேண்டும்


கல்வித்துறை பணியாளர்களை பணியிடம் மாறுதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 9 Sep 2018 9:30 PM GMT (Updated: 9 Sep 2018 7:21 PM GMT)

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை பணியிடம் மாறுதல் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பீட்டர் பிரான்சிஸ், மாவட்ட துணை தலைவர்கள் ஜெகதீசன், செந்தாமரை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- அரசாணைப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை பணியிடம் மாறுதல் செய்திட அரசை வலியுறுத்துவது. அரசு பொது தேர்வுகள் மற்றும் மாவட்ட தேர்வுகள் தொடர்பான நிதியை கையாளுவதில் வெளிப்படை தன்மை வேண்டும். தலைமை ஆசிரியர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பும் அதற்கான படிவங்களும் 2 நாட்களுக்கு முன்னரே கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து பெறப்படும் பல்வேறு கருத்துக்கள் குறித்து அரசு அதிகாரத்திற்கு உட்பட்டு உடனே தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர்கள் மதிவாணன், சண்முகநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார். 

Next Story