இன்று முழு அடைப்பு போராட்டம்: பந்த்தில் அ.தி.மு.க.– பா.ஜ. தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


இன்று முழு அடைப்பு போராட்டம்: பந்த்தில் அ.தி.மு.க.– பா.ஜ. தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
x
தினத்தந்தி 9 Sep 2018 11:15 PM GMT (Updated: 9 Sep 2018 8:24 PM GMT)

தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக மதுரையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

மதுரை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குறித்து ஏற்கனவே சோனியாகாந்தி மறப்போம், மன்னிப்போம் என்று கூறியிருக்கிறார். எனவே அந்த 7 பேரையும் விடுதலை செய்வது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.

பெட்ரோல்–டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இது விரைவில் ரூ.100–ஐ எட்டிவிடும் போல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (அதாவது இன்று) நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றன.

இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. திருநாவுக்கரசர் தலைமையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அமைச்சர்கள், துணை முதல்–அமைச்சர் மற்றும் முதல்– அமைச்சர் மீது புகார்கள் உள்ளன. இதற்கு வருமான வரித்துறை சோதனை மட்டுமே போதாது. குற்றம் செய்தவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமையாகும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் இதுவரை வரவில்லை. தற்போது நடிகை கோவை சரளாவும் கட்சி தொடங்க இருக்கிறார். மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் கட்சி தொடங்கினால்தான் நிலைத்து நிற்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story