குட்கா விவகாரம்: தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது


குட்கா விவகாரம்: தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது
x
தினத்தந்தி 9 Sep 2018 10:27 PM GMT (Updated: 9 Sep 2018 10:27 PM GMT)

குட்கா விவகாரம் தொடர்பாக தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தலில் சிறப்பு முகாம் நடந்த பகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வந்தார். அவர், வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க அறிவுறுத்தினார். அப்போது, முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக அதிக அளவில் சேர்க்க வேண்டும். அந்த முனைப்போடு, மாவட்டநிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்படுகிறது. யாரும், யாரையும் மிரட்ட முடியாது. அரசியலில் அச்சுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. இதுவரை அரசியல் வரலாற்றில் யாரும் அச்சுறுத்தி சாதிக்க முடியாதநிலை உள்ளது.

தி.மு.க. சி.பி.ஐ. விசாரணை கோரியதால், விசாரணை நடந்து வருகிறது. இதை அரசியலாக கருதவில்லை. பா.ஜனதா, தி.மு.க. கூட்டணி இருந்தால் என்றைக்காவது வெளிச்சத்துக்கு வரும் என்று கூறினார்.


Next Story