கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 9 Sep 2018 11:47 PM GMT (Updated: 9 Sep 2018 11:47 PM GMT)

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீரென இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி கூசாலிபட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கையா. தள்ளுவண்டியில் மிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார்(வயது1½). இவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவனை அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்று சிகிச்சை கொடுத்தனர். 2 நாட்களில் காய்ச்சல் குறைந்ததால் அவன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 5-ந்தேதி வீட்டுக்கு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு டாக்டர் ஆலோசனைப்படி ஊசி போடப்பட்டது. பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு, மறுநாள் காலையில் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவனை மீண்டும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கூட்டி சென்றனர். நேற்று முன்தினம் அவனுக்கு வீக்கத்தை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அவன் பரிதாபமாக உயிர் இழந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்கையா கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அவனது உடலை பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story