அந்தியூர் அருகே உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


அந்தியூர் அருகே உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 10 Sep 2018 11:15 PM GMT (Updated: 10 Sep 2018 1:25 PM GMT)

அந்தியூர் அருகே உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். இவர் அந்தியூர் அருகே உள்ள அத்தாணிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

அப்போது அவருக்கும் அத்தாணி காலனி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதுபற்றி மாரியம்மாளுக்கு தெரியவந்ததும் சுரேசை கண்டித்து உள்ளார். ஆனால் கள்ளக்காதல் தொடர்பை சுரேஷ் கைவிடவில்லை. மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மாரியம்மாளிடம் சண்டை போட்டதுடன் குடும்பம் நடத்த பணம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சுரேசிடம் கோபித்துக்கொண்டு பூதப்பாடி அருகே அலங்காரியூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு மாரியம்மாள் சென்றுவிட்டார்.

இதற்கிடையே ஜோதியின் கள்ளக்காதல் விவகாரம் அவருடைய கணவர் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது. இதனால் அவர் ஜோதியை கண்டித்தார். எனினும் சுரேசுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட ஜோதி மறுத்து உள்ளார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் அவர் இதுகுறித்து சுரேசிடம் கூறினார். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு கள்ளக்காதல் ஜோடியினர் வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வீட்டை ஜோதி வெளியேறினார். பின்னர் அவரும், சுரேசும் ஒன்று சேர்ந்து அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், ஆப்பக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரேஷ், ஜோதி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story