சென்னை அபிராமபுரத்தில் போலீசை மிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது
சென்னை அபிராமபுரத்தில் போலீசை மிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். சைரன் வைத்த கார் மற்றும் அதில் இருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அடையாறு,
சென்னை ஆர்.ஏ.புரம் கேசவ பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜூனத் பேகம் (வயது 35). இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டின் கீழ் தளத்தில், இவரது கணவர் சகோதரரின் 2–வது மனைவி சஹானா வசித்து வருகிறார். இந்த வீடு தொடர்பாக ஜூனத் பேகத்துக்கும், சஹானாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. போலீஸ் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், நேற்று காலை ஜூனத் பேகத்துக்கும், சஹானாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்க பெண் போலீஸ் ஒருவர் அங்கு சென்றார். அப்போது அந்த வீட்டுக்கு போலீஸ் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்த சைரன் வைத்த கார் ஒன்று வந்தது.
ஐ.பி.எஸ். அதிகாரி
அதில் வந்த வாலிபர் தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார். பின்னர் பெண் போலீசிடம் நீங்கள் போலீஸ் நிலையம் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்ற பெண் போலீஸ், நடந்தவற்றை இன்ஸ்பெக்டர் அஜிகுமாரிடம் தெரிவித்தார்.
பின்னர் சஹானாவும், அந்த வாலிபரும் அதே காரில் அபிராமபுரம் போலீஸ் நிலையம் வந்தனர். அந்த வாலிபர் இன்ஸ்பெக்டர் அஜிகுமாரிடம், தான் இன்டர்போல் துணை கமிஷனர் என்றும், ஏ.டி.ஜி.பி. ஒருவரின் பெயரை கூறி அவரை தனக்கு தெரிந்தவர், அவருடன் தான் வேலை பார்த்ததாகவும் அதிகார தோரணையில் கூறியுள்ளார்.
கஞ்சா பறிமுதல்
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், அடையாள அட்டை மற்றும் பணி தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். இதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மகன் சிவநேசன் (25) என்பதும், போலி ஐ.பி.எஸ் அதிகாரியாக சைரன் வைத்த காரில் வலம் வந்ததும் தெரியவந்தது.
மேலும், பட்டப்படிப்பு முடித்துள்ள சிவநேசன், சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் தொடர்பாக படித்துள்ளதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் சைரன் வைத்த கார் மற்றும் அதில் இருந்த 6 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலி ஐ.பி.எஸ். அதிகாரி சிவநேசனை போலீசார் கைது செய்தனர். இதேபோல், அவர் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story