பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 13 பயனாளிகளுக்கு ரூ.3.27 லட்சம் நலத்திட்ட உதவிகள்


பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 13 பயனாளிகளுக்கு ரூ.3.27 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 10 Sep 2018 10:30 PM GMT (Updated: 10 Sep 2018 8:40 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர், மின்சார வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை, இலவச தையல் எந்திரம், சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 187 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் பிரபாகர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மனுவின் தன்மை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பரிசீலனை செய்து சட்ட விதிகள்படி உரிய உத்தரவு வழங்க வேண்டும். மேலும் முதல்-அமைச்சரின் தனி பிரிவு மனுக்கள், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெற பட்ட மனுக்களை பதிவேடு மூலம் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2 பேருக்கு நவீன செயற்கை கால்கள், ஒருவருக்கு நவீன செயற்கை கை, மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பாக இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு நிதியாக வாரிசுதாரர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக தொன்னைகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பருக்கு ரூ.5,481 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரம் என 13 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 981 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story