ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2018 9:05 PM GMT (Updated: 10 Sep 2018 9:05 PM GMT)

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருச்செங்கோட்டில் ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ், நகர தி.மு.க.செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர ம.தி.மு.க.செயலாளர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜகோபால், நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஆதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் வைகறைச் செல்வன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் பாலு, ஆதித் தமிழர் மணிமாறன், மற்றும் நசீர் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ராமமூர்த்தி, குபேர்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் பழக்கடைகள், காய்கறி, மளிகை, டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. காலை 9 மணிக்கு திருச்செங்கோடு நகர தி.மு.க. அமைப்பாளர் கார்த்திகேயன், தலைமை கழக பேச்சாளர் முரசொலி முத்து, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனகோபால், நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு திரண்டனர். நான்கு ரத வீதிகள், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டினர்.

பரமத்தி வேலூர், பெத்தனூர் மற்றும் பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி வேலூர் வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பேசினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story