தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் 43 பேர் கைது


தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் 43 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2018 10:15 PM GMT (Updated: 10 Sep 2018 9:31 PM GMT)

சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்கக்கோரி திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

சம்பா பயிர்களை காப்பாற்ற தேவையான அளவு தண்ணீரை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். முக்கொம்பு அணையை விரைவாக சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தேசபந்து, காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் மீனாட்சிசுந்தரம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோசிமணி உள்பட பலர் கலந்்து கொண்டனர்.

சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story