3 சக்கரவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிவந்து போராட்டம்


3 சக்கரவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிவந்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2018 10:14 PM GMT (Updated: 10 Sep 2018 10:14 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு 3 சக்கரவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிவந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,


நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட துணைதலைவர் சாகுல்அமீது உஸ்மானி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு 3 சக்கரவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிவந்தனர். அவர்களை போலீசார் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர். பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவால் நாளுக்கு நாள் அவற்றின் விலை உயர்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவற்றின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பேட்டை மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம், உயிரியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என்று கூறி இருந்தனர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை ஊருடையான்குடியிருப்புக்கு குடிநீர்வசதி, பொதுக்கழிப்பிடவசதி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கூறி இருந்தனர்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரம் நாச்சியாரம்மன் கோவில் வழியாக ரோடு அமைத்து சரள் மண் அடிப்பதாக கூறி ஆற்றுமணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் கடத்தலை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறி உள்ளார்.

கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தை சேர்ந்த 21 பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சீட்டு கட்டி ரூ.26 லட்சம் ஏமாற்றப்பட்டு உள்ளோம். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
சிவந்திபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி கிராம மக்கள், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். இதேபோல் முன்னீர்பள்ளம் புதுக்கிராமம் பகுதி மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் சிவந்திப்பட்டி செல்கின்ற சாலையில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மக்கள் உரிமை கழகத்தினர் மனு கொடுத்தனர்.
முன்னீர்பள்ளம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க கூடாது என்று கூறி பெண்கள் மனு கொடுத்தனர். 

Next Story