மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்


மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 10 Sep 2018 11:42 PM GMT (Updated: 10 Sep 2018 11:42 PM GMT)

தேனியில் மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கத்தினர் மனு அளித்தனர்.

தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கத்தின் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘தேனி காமராஜர் பஸ் நிலையம் எதிரே மதுரை சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்களும் மனு அளித்து இருந்தோம். எதிர்ப்புகளை எல்லாம் மீறி அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்த கடை உள்ளது. உணவகம், கடைகள், மருந்துகடைகள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.

இதேபோல் தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி நகரின் மையப்பகுதியில் பலரும் பயன்பெறும் வகையில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு காமராஜர் பெயரில் ஆர்ச் போன்ற வளைவு அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை நாங்களே எங்கள் செலவில் செய்வதற்கு தயாராக உள்ளோம். அதற்கு உரிய அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. பொது கழிப்பிட வசதி இல்லை. எனவே இங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘கைலாசப்பட்டி கிராமத்தில் பாப்பிபட்டி கண்மாய் உள்ளது.

புதர் மண்டி கிடக்கும் இந்த கண்மாயை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். 

Next Story