பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஜோதிடர் உள்பட 2 பேர் கைது


பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஜோதிடர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2018 9:45 PM GMT (Updated: 11 Sep 2018 7:30 PM GMT)

பெருந்துறையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை, 


பெருந்துறை பஸ் நிலையம் அருகே ஜோதிட நிலையம் வைத்து நடத்தி வருபவர் செந்தில்குமார் (வயது 49). இந்த ஜோதிட நிலையத்தில் உதவியாளராக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் வேலைசெய்து வந்தார்.

மேலும் அந்த நிலையத்தில் ஜோதிடரின் நண்பர் வேலுமணி என்கிற டேனியல் (45) என்பவரும் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் செந்தில்குமாரும், வேலுமணியும் சேர்ந்து உதவியாளராக வேலை செய்து வந்த அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இவ்வாறு என்னிடம் நடந்து கொள்ள வேண்டாம் என்று அவர்கள் 2 பேரிடமும் கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். மேலும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் இதனை வெளியே கூறினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டலும் விடுத்து உள்ளனர். இதுகுறித்து அந்த பெண் பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேலுமணி மற்றும் ஜோதிடர் செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். 

Next Story