பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கழக தலைவர் கலெக்டரிடம் மனு


பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கழக தலைவர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 11 Sep 2018 8:15 PM GMT)

மதுரை கிளை கோர்ட்டு உத்தரவுபடி பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கழக தலைவர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி குமரி மேற்கு மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சட்டம் மற்றும் மனித உரிமைகள் கழக தலைவர் ஏசுராஜா, குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள முகிலன்கரை-சித்திரங்கோடு, காஞ்சான்காடு, காரணிபொற்றை, செங்கோடி- ஒட்டலிவிளை ஆகிய சாலைகள் பழுதடைந்து குண்டும்- குழியுமாகவும், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதிகள் பறப்பதால் புகைமண்டலமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சாலைகளை சீரமைக்க கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் பல முறை பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைதொடர்ந்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுமக்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருப்பினும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் மதுரை கிளை கோர்ட்டு 4 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே மனுவை மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குனர், வேர்கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

Next Story