அதிகாரி வராததால் கூட்டம் புறக்கணிப்பு: தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


அதிகாரி வராததால் கூட்டம் புறக்கணிப்பு: தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 11 Sep 2018 9:05 PM GMT)

தஞ்சையில் அதிகாரி வராததால் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் கருகிய நாற்றுகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நேற்றுகாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு தாலுகா பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுக்களுடன் வந்திருந்தனர். மேலும் தண்ணீர் இல்லாததால் கருகிய நெல் நாற்றுகளை அதிகாரியிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்திருந்தனர். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மதியம் 12 மணி ஆகியும் வருவாய் கோட்டாட்சியர் வராததால் கூட்டம் தொடங்கப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த விவசாயிகள், கூட்டத்தை புறக்கணித்து விட்டு அறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை நேர்முகஉதவியாளர் மற்றும் அலுவலர்கள் சமரசம் செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் எங்களை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று கோபமாக கூறிவிட்டு வெளியே வந்த விவசாயிகள் திடீரென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார், கீழத்திருப்பூந்துருத்தி சுகுமாரன், நடராஜன், அம்மையகரம் ரவிச்சந்தர், ஆம்பலாப்பட்டுதெற்கு தங்கவேல், ஒரத்தநாடு சின்னத்தம்பி, அணைக்குடி அய்யாரப்பன், கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன் மற்றும் கோவிந்தராஜ் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கருகிய நெல் நாற்றுகளை கையில் ஏந்தி தமிழகஅரசுக்கு எதிராகவும், வருவாய் கோட்டாட்சியரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து ராயமுண்டான்பட்டி விவசாயி வெ.ஜீவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

1 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் 7 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம். ஆனால் இதுவரை 150 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தலைமடை, நடுமடை, கடைமடை என எந்த பகுதிகளிலும் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. முக்கொம்பு மேலணை மதகு உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் விரைவாக மேற்கொள்ளாத காரணத்தினால் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து கர்நாடகத்தில் 4 அணைகளும் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் மேட்டூர் அணை நிரம்பி ஆறுகளில் தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. ஆனால் வயல்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. திருவையாறு பகுதிகளில் சாகுபடி செய்வதற்காக நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தண்ணீர் இல்லாத காரணத்தினால் நாற்றுகள் காய்ந்துவிட்டன. எங்களது கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 மணிநேரம் காத்திருந்தும் வருவாய் கோட்டாட்சியர் வரவில்லை. எங்களது கருத்தை கேட்க அதிகாரிகள் கூட தயாராக இல்லை. கர்நாடகஅரசு முதுகில் குத்துகிறது என்றால் தமிழகஅரசின் பொதுப்பணித்துறை வயிற்றில் அடிக்கிறது.

இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியுமா? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே சாகுபடிக்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்கப்படுமா? என்பதை தமிழகஅரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  பின்னர் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story