ஏ.டி.எம். எந்திரத்தில் பண மோசடி செய்த வாலிபர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தில் பண மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2018 11:12 PM GMT (Updated: 11 Sep 2018 11:12 PM GMT)

ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களின் ரகசிய எண்ணை பயன்படுத்தி பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவின் உதவியால் அவர் சிக்கினார்.

நல்லூர்,

ரகசிய எண்ணை பயன்படுத்தி பண மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் தாராபுரம் ரோடு கார்த்திக் நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி ராணி (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி திருப்பூர் கோவில்வழியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். இவருக்கு ஏ.டி.எம்.கார்டை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க தெரியாது.

இதனால் அந்த மையத்தில் நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து ரகசிய குறியீட்டு எண்ணையும் கூறி பணம் எடுத்து தருமாறு கூறினார். அந்த வாலிபரும் ஏ.டி.எம்.கார்டை எந்திரத்தில் சொருகிய பின்னர் “உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை, எனவே வங்கியில் போய் கேளுங்கள்” என்று ராணியிடம் கூறினார். இதை நம்பிய ராணி, வீட்டிற்கு சென்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக்கொண்டு பின்னர் கோவில்வழியில் உள்ள கரூர் வைசியா வங்கிக்கு சென்று வங்கி அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளார்.

அப்போது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுத்து மோசடி செய்து இருப்பதும், ஏ.டி.எம். மையத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து வங்கிக்கு வந்த இடைப்பட்ட நேரத்தில், அதே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து இருப்பதும் தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக புகார் ஒன்றை வங்கி அதிகாரியிடம் கொடுத்தார்.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் அந்த ஏ.டி.எம்.மையத்திற்கு சென்று, ராணியிடம் ஏ.டி.எம்.கார்டை வாங்கிய நபரின் உருவத்தை ஏ.டி.எம். மையத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவில் இருந்து தனியாக பதிவு செய்து கொண்டனர். இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இதே வங்கியில் கணக்கு வைத்துள்ள பாண்டீஸ்வரி (40) என்பவர் பணம் எடுக்க சொல்லி ஏ.டி.எம்.கார்டை அங்கிருந்த வாலிபரிடம் கொடுத்தபோது, அந்த வாலிபரும் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை சொருகிய பின்னர் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டீஸ்வரி அந்த வங்கிக்கு சென்று கேட்டபோது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பாண்டீஸ்வரியிடம் ஏ.டி.எம்.கார்டை வாங்கிய வாலிபரின் உருவத்தை ஏ.டி.எம்.மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, ஏற்கனவே ராணியை ஏமாற்றிய வாலிபரின் உருவமும், இந்த வாலிபரின் உருவமும் ஒரே மாதிரியாக இருந்தது.

இதையடுத்து அந்த ஏ.டி.எம்.மையத்திற்கு அந்த வாலிபர் மீண்டும் வருவாரா? என்று வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுகாலை 11 மணிக்கு கோவில் வழியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் நீண்ட நேரமாக நிற்பதை கண்காணிப்பு கேமராவில் வங்கி அதிகாரிகள் பார்த்தனர். மேலும் ஏற்கனவே ஏ.டி.எம்.கார்டை வாங்கி அதன் மூலம் பணத்தை திருடிய வாலிபரின் உருவமும், இந்த வாலிபரின் உருவமும் ஒரே மாதிரியாக இருந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை வங்கி அதிகாரிகள் வங்கிக்குள் அழைத்து அவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்து, திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி பள்ளங்கி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் ஓம்பிரகாஷ் (32) என்றும், இவர் திருப்பூர் முத்தணம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் அவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து, அவர்கள் சென்ற பிறகு அவர்கள் கூறிய ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை திருடியதும் தெரியவந்தது. ராணியையும், பாண்டீஸ்வரியையும் இவர்தான் ஏமாற்றி பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஓம்பிரகாசை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் இதே போல் வேறு எங்கேயாவது கைவரிசை காட்டி உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story