மயிலாடுதுறையில் கார்-நகைகளுடன் மாயமான வாலிபர் கைது


மயிலாடுதுறையில் கார்-நகைகளுடன் மாயமான வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 5:49 PM GMT)

மயிலாடுதுறையில் கார் மற்றும் நகைகளுடன் மாயமான வாலிபர் வாகனசோதனையில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை, 


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காரவிலை பகுதியை சேர்ந்த டேவிட்சன் மகன் டேவிட் சஜ்மோன் (வயது 26). கார் டிரைவர். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை கொத்தத்தெரு அருகே படையாச்சி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் வடக்கு வீதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பாலாஜி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் பாலாஜி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள தனது காரை விற்பதற்காக டேவிட் சஜ்மோனை அணுகினார். அதன்பின்னர் கடந்த 7-ந் தேதி காரை விற்று வருவதாக கூறி பாலாஜியின் காருடன் வெளியே சென்ற டேவிட் சஜ்மோன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் டேவிட் சஜ்மோனின் எதிர் வீட்டை சேர்ந்த ஆனந்த் மனைவி கவிதா என்பவர் தனது 5 பவுன் நகைகளை விற்பதற்காக டேவிட் சஜ்மோனிடம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த நகையுடனும் டேவிட் சஜ்மோன் மாயமாகி உள்ளார்.

இதனை தொடர்ந்து பாலாஜி, தனது காரை திருடி கொண்டு சென்றுவிட்டதாவும், கவிதா தனது 5 பவுன் நகைகளை விற்று தருவதாக கூறி மோசடி செய்ததாகவும் டேவிட் சஜ்மோன் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் வரிச்சுக்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த காரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் காரை ஓட்டி வந்தவர் டேவிட் சஜ்மோன் என்பதும், அவர் பாலாஜியின் கார் மற்றும் கவிதாவின் நகைகளுடன் மாயமானதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் டேவிட் சஜ்மோனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கார் மற்றும் 5 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

Next Story