தொட்டியம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


தொட்டியம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 8:02 PM GMT)

தொட்டியம் அருகே, ‘தேர்வுக்கு படி’ என்று தந்தை திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தொட்டியம்,


திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரியணாம்பேட்டை அரிஜனத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் விஸ்வா(வயது 15). இவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை விஸ்வா வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். இதைப்பார்த்த அவரது தந்தை காலாண்டு தேர்வுக்கு படிக்காமல் விளையாடிக்கொண்டிருக்கிறாயே என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் விஸ்வா காணப்பட்டான். இந்நிலையில் நேற்று முன்தினம் விஸ்வாவின் பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். அப்போது வீட்டில் உள்ள மின் விசிறியில் விஸ்வா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். பின்னர் வீடு திரும்பிய அவனது பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஸ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாணவனின் தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story