8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு செயல்பட வேண்டும்


8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 12 Sep 2018 9:52 PM GMT (Updated: 12 Sep 2018 9:52 PM GMT)

சேலம்- சென்னை இடையே 8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கரூரில் ஜி.கே.வாசன் கூறினார். கரூர் வெங்கமேடு பகுதியில் நேற்று நிருபர்களுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர், 


பெட்ரோல்- டீசல் விலையுயர்வினை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசினை கண்டித்து நாளை மறு நாள் காலை (நாளை வெள்ளிக்கிழமை) சென்னை கலெக்டர் அலு வலகம் முன்பு த.மா.கா. சார்பில் என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்க வேண்டும். நாளை (இன்று) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பல்வேறு வழிமுறைகளை கூறி சிலை வைப்போரை வைக்கவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல. எனவே வழிப்பாட்டிற்காக விநாயகர் சிலை வைப்பதற்கு வகுக்கப்பட்ட விதிகளை சற்று தளர்த்த வேண்டும். மேலும் போக்குவரத்திற்கு இடை யூறாக வைக்கப்படக்கூடிய சிலைகளை மட்டும் தான் போலீஸ் துறையினர் தடை செய்ய வேண்டும்.

சேலம்- சென்னை இடையே 8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவினை மீறி தமிழக அரசு ஈடுபடுகிறது. அதனை தவிர்த்து கோர்ட்டு உத்தரவுப்படி அரசு செயல்பட வேண்டும். இந்த திட்டத்தால் தங்களது வீடுகளை இழக்க நேரிடும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசானது மக்கள் மீது திட்டங்களை திணிக்க கூடாது. மாறாக கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் ஜனநாயகத்திற்கு நல்லதாக இருக்கும். 8 வழி சாலையை 6 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து, இறுதி முடிவு வந்தபின்னரே கருத்து கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜி.கே.வாசன், கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினர் கே.நாட் ராயன் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் வரவேற்பினை ஏற்று கொண்டார். 

Next Story