சேலம் மாவட்டம்: 1,711 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி


சேலம் மாவட்டம்: 1,711 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
x
தினத்தந்தி 12 Sep 2018 11:22 PM GMT (Updated: 12 Sep 2018 11:22 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 1,711 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது.

சேலம்,

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பலர் வீட்டில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

அப்போது விநாயகருக்கு எருக்கம் பூ, அருகம்புல் மாலையிட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பொரி, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவார்கள்.

இதையொட்டி, நேற்று சேலம் கடைவீதி, ஆற்றோர காய்கறி மார்க்கெட், பட்டைகோவில், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எருக்கம் பூ மாலை, அருகம்புல், விநாயகர் சிலைகள் மீது வைக்கப்படும் அலங்கார குடைகள் மற்றும் தேங்காய், பழம் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அவர்கள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றதால் விற்பனை படுஜோராக நடந்தது. மேலும் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் பலர் வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலம் ராஜகணபதி கோவிலில் இன்று காலை 4 மணி முதல் 6 மணி வரை கணபதி ஹோமமும், 10 மணி முதல் 12 மணி வரை அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ராஜகணபதிக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

இதேபோல், சேலம் ராஜாராம் நகரில் உள்ள தேவராஜ கணபதி-வரப்பிரசாத ஆஞ்சநேயர் கோவில், நெடுஞ்சாலைநகர் வரசித்தி விநாயகர் கோவில், தாதுபாய்குட்டை ஓம்சக்தி வேம்பரசர் விநாயகர் கோவில், மல்லமூப்பம்பட்டி செல்வவிநாயகர் கோவில் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

சேலம் மாநகரில் 750 இடம், மாவட்டத்தில் 961 இடம் என மொத்தம் 1,711 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதலே சேலம் மாநகரில் பெரும்பாலான இடங்களில் வழிபாட்டுக்காக பலர் விநாயகர் சிலைகளை வைத்திருந்தனர். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story