பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வாலிபர் படுகாயம் பாளையங்கோட்டையில் பரபரப்பு


பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வாலிபர் படுகாயம் பாளையங்கோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 6:21 PM GMT)

பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வாலிபர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

பாளையங்கோட்டை யில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வாலிபர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பிடித்தது

பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ஜெயக்குமார். இவரது மகன் ஆல்வின் (வயது 19). இவர் முருகன்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளின் டேங்க் நிரம்பும் அளவுக்கு பெட்ரோல் போட்டார். அப்போது சிறிதளவு பெட்ரோல் மோட்டார் சைக்கிள் மீது கொட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அதை இயக்கினார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. அதில் உட்கார்ந்து இருந்த ஆல்வின் மீதும் தீப்பற்றியது. அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு, அலறியபடி தரையில் உருண்டு தீயை அணைக்க முயன்றார். ஆனால் ஆல்வினால் தீயை அணைக்க முடியவில்லை. பெட்ரோல் போடுவதற்காக வந்தவர்கள் இதை பார்த்து அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.

படுகாயம்

உடனே பெட்ரோல் பங்க் ஊழியர் ஓடி சென்று அங்கு பாதுகாப்புக்கு வைக்கப் பட்டு இருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி ஆல்வின் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்தார். இந்த விபத்தில் ஆல்வின் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் படுகாய மடைந்த ஆல்வினை மீட்டு சிகிச்சைக்காக பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் பங்க்கில் நடந்த இந்த சம்பவத்தில் தீ உடனடியாக அணைக்கப் பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், இந்த தீ விபத்து பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து பாளையங் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story