பெரமையா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


பெரமையா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 13 Sep 2018 11:05 PM GMT (Updated: 13 Sep 2018 11:05 PM GMT)

ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் பெரமையா முனீஸ்வரர் கோவில் உள்ளது.

ஆலங்குடி,

இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாகபூஜைகள் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 11-ந் தேதி 2-ம்கால யாகபூஜைகள், மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 3-ம்கால யாகபூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை 4-ம்கால யாகபூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பெரமையா முனீஸ்வரர், பெரியகருப்பர், சின்ன கருப்பர், பட்டவர், சப்த கன்னி மார்கள், குருந்தியம்மன், ராக்காச்சி, கொம்புக்காரன் முனிபாதம், பைரவர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல அரிமளம் ஒன்றியம் காரமங்கலம் கீரணிப்பட்டியில் உள்ள செல்வவிநாயகர், மடைக்கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Next Story