ஈரோட்டில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் பலி: 3 பேர் கைது; 15 மூட்டை கல்வெடி பறிமுதல்


ஈரோட்டில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் பலி: 3 பேர் கைது; 15 மூட்டை கல்வெடி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Sep 2018 12:54 AM GMT (Updated: 14 Sep 2018 12:54 AM GMT)

ஈரோட்டில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, 15 மூட்டை கல்வெடியையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

ஈரோடு,

ஈரோடு சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் கார்த்திக்ராஜா, மளிகை கடைக்காரர் முருகன், வேன் டிரைவர் செந்தூர்பாண்டி ஆகிய 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற ஈரோடு சூரம்பட்டி போலீசார் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்த முருகன் மற்றும் அவரது நண்பரான ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் சுகுமாரன் ஆகியோர் தடை செய்யப்பட்ட கல் வெடியை எங்கிருந்தோ வாங்கி, அதை திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் சுகுமாரனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த தங்கமுத்து என்பவர் திருட்டுத்தனமாக கல்வெடி தயாரித்து இவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று வடுகப்பட்டிக்கு விரைந்து சென்று தங்கமுத்துவை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தங்கமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

வாணவெடி மற்றும் சிறிய அளவிலான வெடிகள் தயாரித்து விற்பனை செய்வது எங்களுடைய குல தொழில் ஆகும். என்னுடைய தந்தை ஆர்டரின் பெயரில் வாணவெடியை ஒரு சிறிய அறையில் வைத்து தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவரைத்தொடர்ந்து நான் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டு வாணவெடி தயாரிப்பதற்கான உரிமத்தை நான் பெற்றேன். அந்த உரிமம் கடந்த 2017-ம் ஆண்டு காலாவதியானது. அதைத்தொடர்ந்து நான் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இந்த நிலையில் முருகன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் என்னிடம் வந்து தடை செய்யப்பட்ட கல்வெடி தயாரித்து கொடுக்கும்படி கேட்டனர். அதன் பேரில் நான் கல்வெடி தயாரித்து அவர்களுக்கு கொடுத்தேன். மேலும் ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த பெரியசாமி (42) என்பவருக்கும் 15 மூட்டை கல்வெடி தயாரித்து கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பெரியசாமி வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவருடைய வீட்டை சோதனை செய்தபோது, 15 மூட்டைகளில் கல்வெடி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த 15 மூட்டை கல்வெடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுகுமாரன், தங்கமுத்து, பெரியசாமி ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் பட்டாசு தொழிற்சாலை ஏதேனும் உள்ளதா?, இதேபோல் தடைசெய்யப்பட்ட கல்வெடிகள் தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? வேறு யாரேனும் இதேபோல் கல்வெடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story