2 ஆயிரம் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்


2 ஆயிரம் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
x
தினத்தந்தி 14 Sep 2018 1:08 AM GMT (Updated: 14 Sep 2018 1:08 AM GMT)

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வடிவிலான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதற்காக வேலூர் பஜாரில் குவிந்தனர்.

ஆங்காங்கே களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். அதேபோன்று பூஜை பொருட்களையும் வாங்கிச்சென்றனர். இதனால் பஜாரில் நேற்று கூட்டம் அலைமோதியது.

அதேபோன்று இந்து முன்னணி மற்றும் இளைஞர்கள் சார்பில் 3 அடி முதல் 12 அடி வரை உயரமுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் இந்து முன்னணி சார்பில் மட்டும் 1,008 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி-2 வடிவிலும், விநாயகர் மாட்டுவண்டியில் செல்வது போன்றும், பெருமாள், காளி, சிவன் வடிவிலும் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நேற்று மாலை பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடியாத்தத்தில் லட்டால் செய்யப்பட்ட விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். இவர்கள் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 17-ந் தேதி வரை இந்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள்.

வேலூர் நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நாளை (சனிக்கிழமை) மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது. இதற்காக சதுப்பேரி ஏரியில் மாநகராட்சி சார்பில் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

Next Story