கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அந்தியோதயா ரெயில் நின்று செல்ல கோரிக்கை


கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அந்தியோதயா ரெயில் நின்று செல்ல கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2018 9:30 PM GMT (Updated: 14 Sep 2018 6:31 PM GMT)

கோவில்பட்டியில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் மதுரை, நெல்லைக்கு அடுத்தபடியாக தினமும் ரூ.4 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய கோவில்பட்டி ரெயில் நிலையம் ‘ஏ‘ கிரேடு அந்தஸ்தில் உள்ளது. எனினும் நெல்லை-தாம்பரம் இடையே தினசரி இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில்-சென்னை இடையே வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

எனவே மேற்கண்ட ரெயில்கள் இருமார்க்கத்தில் செல்லும்போதும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்துகொண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், 5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை, நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சங்கரன், கட்டிட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பரமசிவன், ஆசிரியர் சங்கம் வேலுச்சாமி, ஏ.ஐ.சி.சி.டி.யு. பொன்ராஜ், கருப்பசாமி, அமிர்தராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story