குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை


குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 8:40 PM GMT)

குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

தமிழ்நாட்டில் குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவற்றை உள்ளடக்க பொருட்களாக கொண்ட உணவு பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தடைசெய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் கொண்டு செல்வது, வினியோகிப்பது மற்றும் சில்லரை விற்பனை செய்வது குற்றமாகும். அவ்வாறு செய்தால், விற்பனையாளர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் உணவு வணிகர்கள் தமது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் போகும்.

வீட்டுக்கு ‘சீல்‘ வைக்கப்படும்

சில இடங்களில் உணவு வணிகர்கள் தவிர மொபைல் கடைகள் போன்ற உணவு வணிகர்கள் அல்லாதோர் கடைகளில் இந்த பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் அவர்களது தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். சிலர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் எந்த ஒரு குடியிருப்பு பகுதியிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வீடு மூடப்பட்டு ‘சீல்‘ வைக்கப்படும். இதுதவிர அந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story