மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 9:35 PM GMT)

நாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகையில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாநில குழு உறுப்பினர் ராமலிங்கம், நகர தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி கமிட்டி உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் நாகை கோட்டைவாசலில் இருந்து தொடங்கி பெருமாள் கோவில் பஸ் நிறுத்தம், சி.எஸ்.ஐ., பள்ளி, பழைய பஸ் நிலையம் வழியாக தலைமை தபால் நிலையத்துக்கு வந்தடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் இந்திய ராணுவத்திற்கு ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் செய்ததாக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு அளித்தனர்.

Next Story