இளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர்


இளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:15 PM GMT (Updated: 14 Sep 2018 10:38 PM GMT)

இளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தென்னகபண்பாட்டு மைய இயக்குனராக பணியாற்றி வந்த சஜித் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய இயக்குனராக கேரளமாநிலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தற்போது மத்திய கலாசாரத்துறையின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

பாலசுப்பிரமணியம் கேரள மாநிலத்தில் உள்ள செம்மை அரசு இசைக்கல்லூரி மற்றும் ஆர்.எல்.வி. இசைக்கல்லூரியில் முதல்வராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை டீன் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு சென்று உலக இசை விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி உள்ளார்.

மேலும் செம்மங்குடி சீனிவாசஐயர், பேராசிரியர் நாராயணசாமி, ஜெயராமன், மாண்டலின் சீனிவாஸ், புல்லாங்குழல் ரமணி மற்றும் பல்வேறு இசை கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

தென்னக பண்பாட்டு மைய இயக்குனராக பதவி ஏற்றது குறித்து பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், “தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும்”என்றார்.

Next Story