மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சந்தியகண்டனூரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் தணிகாசலம்(வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சரிதாவுடன் கெடாரில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். செஞ்சி அடுத்த கெடார் அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, தணிகாசலம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தணிகாசலம் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தணிகாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். சரிதா காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story