வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:32 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தின் முடிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஊர்வலத்தில் பங்கேற்ற தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் கடந்த 10–ந் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தை புதுவையில் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தீர்கள். இதற்காகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரபேல் விமான ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். 2014–ம் ஆண்டு ரபேல் விமானம் வாங்க அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தார். ஒரு விமானம் ரூ.576 கோடி என 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது ஒரு விமானத்தை ரூ.1760 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் ரூ.41 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

தற்போது பெட்ரோல் விலை ரூ.85 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் ரூ.60 ஆக இருந்தது. பணமதிப்பு இழப்பு திட்டத்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும். எனவே நடைபெற உள்ள தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பேசியதாவது:–

பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 போர் விமானங்கள் வாங்க முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஒப்பந்தம் போட்டார். அப்போது ஒரு விமானம் ரூ.526 கோடியில் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 26 விமானங்களை பிரான்ஸ் தரும். மீதி விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தொழில்நுட்ப உதவி தரும். இதன் மூலம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

ஆனால் பிரதமர் மோடி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தத்தை போட்டு ரூ.41 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி மத்திய பொதுத்துறை நிறுவனத்தை இணைத்து ஒப்பந்தம் போட்டது. ஆனால் பா.ஜ.க. ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனம் ஒப்பந்தம் போடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story