ஈகுவார்பாளையம், கோவில் குப்பம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


ஈகுவார்பாளையம், கோவில் குப்பம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:29 PM GMT (Updated: 15 Sep 2018 9:29 PM GMT)

ஈகுவார்பாளையம், கோவில் குப்பம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தூர் நத்தம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வட்டவழங்கல் அதிகாரி செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி சூரியபிரகாஷ், தாலுகா அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 4 மனுக்களும், இலவச வீட்டுமனை பட்டா கோரி 3 மனுக்களும், இதர மனுக்கள் 2 என சேர்த்து மொத்தம் 9 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி வழங்கினார். முன்னதாக மகேஷ் வரவேற்றார். முடிவில் கிராம உதவியாளர் விஜயகாந்த் நன்றி கூறினார்.

கோவில் குப்பம்

திருவள்ளூரை அடுத்த கோவில் குப்பம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பரணிதரன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜெயதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுகுமார், கிருஷ்ணன், செல்வகுமார், குமரவேல், பாக்கியலட்சுமி, ராதிகா, கல்யாணசுந்தரி, மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கல்யாணக்குப்பம் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பரணிதரன் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பேரண்டூர்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை தாசில்தார் வசந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் கண்ணப்பன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துயர்துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 29 பேர் துயர்தடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்களை அளித்தனர். அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் கிராம உதவியாளர்கள் ரகு, செஞ்சுபாபு, சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story