ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி


ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 10:14 PM GMT)

ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு வாழை, வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விளைபயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு எப்போது மின்சாரம் வரும்? என்று மோட்டார் அருகிலேயே விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மோட்டார்களும் பழுதடைந்து விடுகிறது. மேலும் முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால், பயிர்கள் கருகி விடுகின்றன.

மேலும் ஒன்றியத்தில் பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, ராஜதானி உள்ளிட்ட 15 ஊராட்சிகளுக்கு வேலப்பர் கோவில் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது அறிவிக்கப்படாத மின்தடையால் சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் மின்தடை அதிகமாக இருப்பதால் மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story