திண்டுக்கல் வேளாண்மை அதிகாரி வீட்டில் திருடிய நகைகள்: அடமானம் வைத்திருப்பதால் மீட்பதில் சிக்கல்


திண்டுக்கல் வேளாண்மை அதிகாரி வீட்டில் திருடிய நகைகள்: அடமானம் வைத்திருப்பதால் மீட்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:00 PM GMT (Updated: 15 Sep 2018 10:42 PM GMT)

திண்டுக்கல் வேளாண்மை அதிகாரி வீட்டில் திருடிய நகைகளை அடமானம் வைத்திருப்பதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 37 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை, திருட்டு வழக்கில் கோவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

திண்டுக்கல் வேளாண்மை அதிகாரி நாகேந்திரன் வீட்டில் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திண்டுக்கல் போலீசார் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 7 பவுன் நகையை, நாகேந்திரனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2016-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவருடைய வீட்டில் அவர் 40 பவுன் நகைகளை திருடி உள்ளார். இதையடுத்து அந்த நகைகளை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார்.

இதேபோல், நாகேந்திரன் வீட்டில் திருடிய நகைகளையும் அவர் அந்த நிதி நிறுவனத்தில் தான் அடகு வைத்துள்ளார். அந்த நகைகளை கோவை போலீசார் மீட்டனர். ஆனால் பேராசிரியர் வீட்டில் திருடிய நகைகள் அங்கு இல்லை. இதனால், தற்போது மீட்டுள்ள நகைகளை போராசிரியரிடம் ஒப்படைக்க கோவை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

நகைகளை மீட்பதில் சிக்கல் நிலவியதால், கோவை கமிஷனர் அலுவலகத்துக்கு நாகேந்திரன் சென்று தன்னுடைய வீட்டில் திருடு போன நகைகளுக்கான ஆதாரங்களை வழங்கி ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து திண்டுக்கல் போலீசாரும், நாகேந்திரனிடம் இருந்து திருடு போன நகைகளுக்கான ஆதாரங்களை வாங்கிக்கொண்டு கோவைக்கு விரைந்துள்ளனர். அவருடைய நகைகள், அனைத்தும் விரைவில் மீட்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Next Story