விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது பரிதாபம் காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கி மாணவர் பலி


விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது பரிதாபம் காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கி மாணவர் பலி
x
தினத்தந்தி 15 Sep 2018 10:56 PM GMT (Updated: 15 Sep 2018 10:56 PM GMT)

தொட்டியம் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது, காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கி மாணவர் பலியானார்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கடைவீதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சாமிநாதன் (வயது 16). இவர் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வீட்டு அருகே விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வந்தனர்.

நேற்று மாலை அந்த சிலையை ஆற்றில் கரைப்பதற்காக, ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நண்பர்களுடன் சாமிநாதன் முசிறி பெரியார்பாலம் கொக்கு வெட்டியான் கோவில் அருகே அமைந்துள்ள காவிரி ஆற்றுக்கு சென்றார். அங்கு விநாயகர் சிலையை கரைத்து விட்டு அனைவரும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது சாமிநாதன் உள்பட 4 பேரும் புதை மணலில் சிக்கிக்கொண்டனர்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சாமிநாதனின் நண்பர்கள் 3 பேரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சாமிநாதன் புதை மணலில் சிக்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். அரை மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மாணவர் சாமிநாதன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சிலையை கரைக்க நண்பர்களுடன் சந்தோஷமாக வந்த சாமிநாதன் ஆற்றில் புதை மணலில் சிக்கி இறந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Next Story