‘தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மாட்டோம்’ அமைச்சர் தங்கமணி பேட்டி


‘தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மாட்டோம்’ அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2018 11:15 PM GMT (Updated: 16 Sep 2018 7:53 PM GMT)

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மாட்டோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு விடும் திட்டம் அரசிடம் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்பதை தெளிவுப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதே போல தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூருக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், வட சென்னையை பொறுத்தவரை 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து கப்பல்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டால் வடசென்னை அனல் மின்நிலையத்தை பொறுத்தவரை அப்படியே பயன்படுத்தி கொள்ளலாம்.மேட்டூரை பொறுத்தவரை ரெயிலில் நிலக்கரியை அனுப்ப வேண்டும். இப்போது 16 வேகன்கள் நிலக்கரி கேட்டு இருக்கிறோம். தற்போது 12 வேகன்களில் நிலக்கரியை அனுப்புகிறார்கள். நிலக்கரி தேவை குறித்து மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கடிதம் எழுதி உள்ளார். நாளைமறுநாள்(அதாவது நாளை) நான் டெல்லி சென்று தினசரி 16 வேகன்கள் நிலக்கரி தமிழகத்திற்கு தர வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது. ஏனெனில் எங்களிடத்தில் உபரியான மின்சாரம் இருக்கிறது. ஆக ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் வதந்தியை கிளப்ப வேண்டும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது நிலவும் சூழல் வெறும் 20 நாட்கள் மட்டும் தான். நிலக்கரி இறக்குமதிக்காக டெண்டர் கோரி உள்ளோம். இரண்டொரு நாளில் இந்த பணி முடிந்து விடும். டெண்டர் விடப்பட்ட உடன் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும். அதன்பிறகு எப்போதும் போல 15 நாட்கள் நிலக்கரியை கையிருப்பு வைத்து கொள்வோம். எனவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவார்கள்.

என்னை டி.டி.வி.தினகரன் மின்வெட்டு அமைச்சர் என்கிறார். வழக்குகளில் சிக்கி இருக்கும் டி.டி.வி. தினகரன் என்னை பார்த்து பேசுவதற்கு தகுதி இல்லாதவர். 16 வேகன்களில் வந்தால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விடும். நம்மிடம் சூரிய சக்தி மின்சாரம் இருக்கிறது. 4 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் மின்தடை இருக்காது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story