ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் கவிழ்ந்து 2 பேர் பலி


ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் கவிழ்ந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Sep 2018 11:30 PM GMT (Updated: 16 Sep 2018 10:39 PM GMT)

ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஆம்பூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் முனீர்அலிகான். இவரது மனைவி ஷபானா கவுசர். இவர்களது உறவினர் பயாஸ்அஹமத். இவரது மனைவி ஷமீம் மற்றும் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான். இவர்கள் 5 பேரும் புனித ஹஜ் பயணம் முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

ஹஜ் பயணம் முடித்துவிட்டு வரும் தனது பெற்றோரை வரவேற்க முனீர்அலிகானின் மகன் முகமதுஅப்பாஸ் கான் (வயது 23), உறவினர் ஜூபேர் (38) ஆகியோர் ஓசூரில் இருந்து 2 கார்களில் சென்னைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு காரில் முனீர்அலிகான், ஷபானா கவுசர், பயாஸ்அஹமத், ஷமீம் ஆகியோர் ஓசூருக்கு புறப்பட்டனர். இவர்களின் உடமைகளை மற்றொரு காரில் எடுத்துக்கொண்டு முகமது அப்பாஸ்கான், ஜூபேர் மற்றும் அப்துல்ரஹ்மான் ஆகியோரும் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை முகமது அப்பாஸ்கான் ஓட்டினார்.

அந்த கார் வேலூரை கடந்து ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வந்தபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது திடீரென கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் பயங்கரமாக மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழந்தது. மோதிய வேகத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் முகமது அப்பாஸ்கான், ஜூபேர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்துல்ரஹ்மான் படுகாயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அப்துல்ரஹ்மான் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்த அமைச்சர் நிலோபர் கபில் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது ஆம்பூர் நகர செயலாளர் எம்.மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Next Story