சேலம் குகை மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை


சேலம் குகை மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை
x
தினத்தந்தி 16 Sep 2018 10:58 PM GMT (Updated: 16 Sep 2018 10:58 PM GMT)

சேலம் குகை மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் குகையில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி கடந்த மாதம் ஆடித்திருவிழா நடைபெற்றது. அப்போது, குண்டம் இறங்குதல் மற்றும் வண்டி வேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் குகை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும், பக்தர்கள் தங்கம், வெள்ளிக்காசுகள் மற்றும் பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர். கோவிலில் உள்ள உண்டியலை வருகிற 24-ந் தேதி திறந்து எண்ணுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சேலம் குகை மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து, அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர். பின்னர், காலையில் கோவில் அருகே பக்தர்கள் சிலர் வந்தபோது, கோவிலுக்குள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியதால் பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை காட்சி பதிவாகாமல் இருக்க கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவில் அருகே உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் கோவிலின் சுவர் ஏறி குதிப்பதும், பிறகு அவர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைப்பதும் பதிவாகியுள்ளது. இதனால் கோவில் கொள்ளையில் ஈடுபட்ட அந்த 3 பேர் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, போலீஸ் மோப்ப நாயும் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் மீண்டும் கோவிலுக்கு வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைத்து உடைக்கப்பட்ட உண்டியல், சிதறி கிடந்த பொருட்களில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கோவில் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூரை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆடித்திருவிழா முடிந்திருப்பதால் உண்டியலில் லட்சக் கணக்கில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், உண்டியலில் நகை, பணம் எவ்வளவு இருந்தது என்பதை அறிய முடியவில்லை என்று தெரிவித்தனர். குகை மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story